என்னடா இவன் இன்னும் ஜெஸிகா புராணம் எழுதலையேன்னு ஏங்குபவர்களுக்கு, ஜெஸிகாவின் உரிமத்தோடு எழுதப்போகும் காதல் கதை இது...
இடம் : கதிரவன்+ஜெஸிகா வீடு.
"காலங்கார்த்தால எழுந்ததும் பல்லுகூட விலக்காம மன்றத்துக்குப் போறீங்களே? அசிங்கமா இல்லையா? " ஜெஸிகா பொரிஞ்சுகிட்டே வந்தாள்.
" கம்ப்யூட்டருக்குள்ளேயே ஸ்மெல் போகுது? போடி, போய் வேலையப் பாரு!"
" ஏய், ஏதோ டைப்பண்ற அது என்னடா? நம்ம கதையா?"
" ஆமா"
"என்ன டைப் பண்ணி வெச்சிருக்கே? இரு படிக்கிறேன்."
///காலேஜ் பருவத்தில ரெண்டுபேருமே ஒண்ணாத்தான் படிச்சோம்... அதாவது ஒரே கிளாஸ்ல படிச்சோம்.. ஓ! சாரி. ஒரே வகுப்பில படிச்சோம். அடிக்கடி சண்டை போடுவோம். எப்போ பார்த்தாலும் உர்?"னு மூஞ்சிய தூக்கி வெச்சுகிட்டு இருக்கும். காலேஜ் ரவுடிங்க லிஸ்ட்ல முதல் முதலா அந்த பொண்ணைத்தான் பார்க்கவேண்டியிருக்கும். பொண்ணு பார்க்க சுமார்தான்..படிக்கிறது ஓரளவுதான். ஆனா நான் படிப்பில பயங்கர சுட்டி, ஒரு கேள்வி கேளுங்க, கரெக்டா சொல்லுவேன். ஆனா அது எனக்குத் தெரிஞ்ச கேள்வியாத்தான் இருக்கணும். இப்படிப்பட்ட புத்திசாலியும் ஒரு ரவுடிப் பொண்ணூம் சேர்ந்தா என்னாகும்? ///
" டேய்! இந்த சுமாரான மூஞ்சியத்தான் தொரத்தி தொரத்தி லவ்வினியா? உண்மையான கதையைச் சொல்லுடா....
ஜெஸிகாவும் நானும் எப்படி காதலித்தோம்? காதல் ஒரு வியாதி என்பார்கள்.. என்னைப் பொருத்தவரை வியாதிக்கான மருந்தே காதல்தான். அதற்காக நீங்கள் மருந்துகடையில் தலைவலிக்கு காதல் மாத்திரை கேட்காதீர்கள்... இப்பொழுதெல்லாம் பெண்கள்தான் மருந்துகடையில் இருக்கிறார்கள். இந்த உணர்ச்சி மிகுந்த காதலை எப்படி வெளிப்படுத்தினேன்? ஒரு முட்டை உடைந்து குஞ்சு வெளியே வருவது போல எனக்கு எப்படி கவிதைகள் வெளியே வந்தன? பொறுங்கள் ஒரு காபி குடித்துவிட்டு வந்து சொல்லுகிறேன்.
ம்ம்.
நானும் ஜெஸிகாவும் கல்லூரியில் படிக்கும்போது நான் பகுதி நேர வேலை செய்துகொண்டிருந்தேன். வேலை என்னவென்றால் பஸ்ஸ்டாண்டு பெண்களை சைட் அடிப்பது.. இதெல்லாம் ஒரு வேலையா என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.. ஒரே ஒருநாள் நீங்கள் பஸ் ஸ்டாப்பில் நின்று பாருங்கள்.. அது எவ்வளவு கடினமான வேலை என்பது உங்களுக்குத் தெரியும். பஸ் ஸ்டாப்பில் மப்டியில் ஒளிந்து இருக்கும் பெண் போலீஸுக்குத் தெரியாமல் மற்ற பெண்களை விழியோரத்தில் வைத்து பார்ப்பது கலெக்டர் வேலைக்கு சமம். அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் வேலையின் கொடுமை.
இப்படிப்பட்ட ஒரு நாள், சாயங்கால வேளை,, மேகம் கருத்தது.. என் வாழ்வு வெளுத்ததற்குண்டான காரணம் அதுதான். எனக்கும் மேகத்துக்கும் பல தொடர்புகள் உண்டு, நான் அடிக்கடி அதனிடம் பேசுவதுண்டு. என்னை பைத்தியக்காரர்கள் என்று சிலர் சொல்லுவார்கள். "வானே வாராயோ" என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், அப்போது பாருங்கள் சரியாக மழை வந்துவிட்டது... அடடா.. குடை எடுத்துவர மறந்துவிட்டேனே... ஆனால் அந்த மறதி என் வாழ்வில் எத்தனை தூரம் கொண்டு போய் விடப்போகிறது என்பதைத் தெரியாமல் இருந்தேன். சரி.. மழையில் நனைந்தாவது குளிப்போமே என்ற எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன். இப்போது கவனமாக படியுங்கள். ஏனென்றால் இது ஹீரோயின் இன்ட்ரடக்ஸன்.
பூமியில் ஒரு மின்னல் வெட்டியது... ஒன்றிரண்டல்ல, ஓராயிரங்கள்... மின்னல் தொகுப்புக்கள் அடங்கிய ஒரு உருவம், அதை உருவம் என்றா சொல்வது? இல்லை பதுமை.. ஓடி வந்தாள். கண்கள் மிரட்சியில் தாழ்ந்துபோயிருந்தது. நெஞ்சம் மூச்சோடு போரிட்டுக் கொண்டிருந்தது...அவள் முகத்தில் தாமரைத் தண்ணீராய் முத்துக்கள் கோர்த்திருந்தன. அவள் கார்குழலிலிருந்து நீர் சொட்டியது. அதனை அவள் எடுத்து பருகிக் கொண்டாள். விழிகளின் துடைப்பங்கள் ஆயிரம் முறை துடித்தது. அவள் இதழ்கள் பேசாத மொழியை பேசியது. பருகிய நீரானது தன் தியாகத்தை எண்ணியபடி உருகியது உதட்டுக்குள். ஓடி வந்த வேகத்தால் மூச்சு இழுக்க அவள் மார்ப்பு ஏற இறங்கியது. விரல்கள் இன்னும் மழைத்துளியைப் பற்றிக் கொண்டிருந்தது. அவள் என்னருகே வந்து நின்றாள். எனது தலைக்கு மேலே விண்மீன்கள் பொறிந்துகொண்டிருந்ததன. எங்களைத் தவிர வேறு எவரும் அங்கில்லை. (கடவுளே) தன் வீட்டிற்குச் செல்லும் பேருந்து வருவதற்காக இருவருமே காத்திருந்தோம். அவள் கையில் குடை வைத்திருந்தாள். எனது விழிகள் தாண்டியா ஆடிக் கொண்டிருந்தன.. இத்தனை அழகான பெண்மனியா என்று எண்ணீக் கொண்டிருந்தேன் (பின்னால் வருத்தப்பட்டது வேறு விஷயம்) . அவள் அழகை வர்ணிக்க அன்று நான் கவிஞனாக இருக்கவில்லை. ஒரேயடியாக விழுந்துவிட்டேன்.... கீழே அல்ல. அவள் மனதினுள்..
அந்த சிலை மெல்ல என்னை நெருங்கியது.
" இந்த குடையிலேயே வந்து நில்லுங்க.."
இந்த கவிதைதான் எனக்குள் அடங்கியிருந்த கவிஞனைத் தூண்டிவிட்டது... என் வாழ்வில் நான் கண்ட முதல் லைவ் கவிதை அவள் பேசியபோது அவள் உதட்டு ரேகைகள் அசைந்து புது ஜாதகம் எழுதியது. பருகிய நீரின் வனப்பு வெட்டிய மின்னலால் தெரிந்தது. மழைத் துளியை துளையிட்டு உறிஞ்சிய பற்கள் சற்றே சிரித்து குரலை, பல்லிடுக்குகளின் வழியே செலுத்தியது. என்னே அழகான குரல்வளம்! காதலித்தால் இவளைத்தான் காதலிக்கவேண்டும். இல்லையென்றால் இவளைவிட அழகான வேற ஒருத்தியைக் காதலிக்கவேண்டும்..
"குடையில நின்னா அது ஒடைஞ்சிறாதா?" இது நான்.. ரொம்ப புத்திசாலித்தனமான பதிலைக் கொடுத்ததும் அவளுக்கு கோபமாகிவிட்டது.. நெருப்பு தட்டிய கண்களைக் கண்டது கலங்கிப் போனது நெஞ்சம். விழி வளையத்தைச் சுற்றி மழைநீர் ஆவியானது... கோபக் கனலில்...
" சரி.. நிக்கறேங்க.. " நின்றேன். சமாதானப் புறாவைத் தூதுவிட்டனுப்பினேன்...
இருவரும் ஒரே குடைக்குள். அவள் யாரென்று நானறியேன். நான் யாரென்று அவளூக்கும் தெரியாது. ஒரே கூரைக்குள் இருந்த உணர்வு அன்று... மெல்ல அவளை கவனித்தேன். அவள் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கவேண்டும்.
நில்லுடா கதிர்.. மிச்சக் கதையை நான் சொல்றேன். இடையில் குறுக்கிட்டாள் ஜெஸிகா..
குடைக்குள்ளே அவன் நின்றது என்னவோ எனக்குத் தெரியவில்லை. . என் மனதுக்குள்ளேயே நின்றமாதிரி ஒரு உணர்வு. அவன் வாசனை என் நெஞ்சைத் துளைத்து ஊடுறுவியது. காதல் தீ அந்த அடைமழையிலும் பற்றி எரிந்தது. அன்று நனைந்து போனது என் உடல் மட்டுமல்ல,. உள்ளமும் தான். ஆனால் அவனிடம் எப்படிப் போய் என் காதலைச் சொல்ல? அடைமழை நீடிக்கட்டும் என்று எண்ணியதில் மண்ணை வாரி இரைத்தது இயற்கை. அவனுள்ளே என்னை நினைத்துக் கொண்டிருப்பானா? கண்டதும் காதல் பற்றியதால் விளைவுகள் ஏற்படாதா?
" உங்க பேர் என்ன?" என்று கேட்டேன். எனது நடுக்கத்தை மறைக்க அந்திநேரக் குளிர்காற்று உதவியது. காற்றின் ஸ்பரிசம் என் காதலைச் சொல்லாதா என்று துடித்தது.
"கதிரவன்"
அவன் சொன்னது தேவலோக இந்திரன் சொன்னதைப் போல இருந்தது. உடனே மெளனராகம் ரேவதி போல ஆடவேண்டும் என்று துடித்தேன். என் கால்கள் அப்படியே தினவெடுத்து ஆடத் தொடங்கியது. ராகங்களுக்கு தயாராக மழைத்துளிச் சொட்டுகள் காத்துக் கிடந்தன. ஒரு கணம் என் எண்ணங்களை நான் மறந்து என்னையே ஒரு லோகத்திற்கு கொண்டு சென்றேன்.
கதிரவன்.. என் வாழ்வில் என்னோடு கலக்கப் போகிறவன். சுவையில்லாத என் வாழ்வின் ருசியாக வரப்போகிறவன். அப்படியா? வருவானா? நான் எப்படி அவனிடம் போய்க் கேட்பது... மழை வேறு நின்றுவிட்டது. எங்களை சேர்த்து வைத்து அழுத அதே மழை எங்களை பிரித்து வைத்து சிரித்தது.
அவன் கிளம்பிவிட்டான்.. என் காதல்? நாட்கள் சில சென்றன.
எனது கண்ணீர் ஒடிந்து கன்னத்தை விட்டு அகல மறுத்தது. புன்னகை மறந்து பின்னர் அதைத் தேடிக் கொண்டிருந்தேன். என் தோட்டத்து மலர்களெல்லாம் என்னோடு சேர்ந்து அழுதன. ஆமாம்... அவைகளுக்கு நான் நீரூற்றவில்லை. உண்மைதான்.... எனக்குள்ளே ஊணில்லை உறக்கமில்லை. உண்மையான உள்ளமுமில்லை.. கோபம் கொப்பளித்தது.
---------------------
போதும் போதும்.. நிறுத்துடி.. மீதிய நான் சொல்றேன்..
இல்ல நான் தான் சொல்லுவேன்..
ம்ஹூம். நாந்தான்....
ஜெஸிகா கோபம் வந்து கணிணியை உடைக்க... பாவம் தமிழ்மன்ற மக்கள்.. பாதிக் கதையைத்தான் அனுபவிக்க முடிந்தது...
Bookmarks